கனடாயணம் : வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு
கனடா செல்ல அனுமதி கிடைத்ததும் வீணையை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம். சமீபத்தில் தான் வீணை ஆன்லைன் க்ளாஸில் சேர்ந்துள்ளேன். என் குரு ஸ்ரீமதி. மாலதி க்ருஷ்ணமணி அவர்கள் கும்பகோணத்தில் இருக்கிறார். சென்னையில் இருந்தவரை நேரில் கற்றுக் கொடுத்தார்கள். கொரோனா லாக்டௌன் வந்தபின் கும்பகோணம் சென்றுவிட்டார். ஆகவே ஆன்லைனில் தொடர்ந்து கற்கலாம் என்ற ஆசை. என் அம்மா அவர்கள் சிறு வயதில் இருந்தே வீணை கற்றுக் கொண்டு அவருடைய குருவுக்கு உதவியாக க்ளாஸ் எடுக்கவும் செல்வார். நான் சிறுமியாக இருந்த போது மிகக் குறைவான காலம் வீணை கற்றுக் கொண்டேன். சித்தி Banumathi Ranganathan அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தனர். அதன்பின் அம்மாவுக்கும் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வெளியே அலைய இயலாமல் வீணை வாசிப்பு நின்றுவிட்டது. பிறகு என் திருமணம் பேத்திகள் பிறப்பு என்று அம்மா முழுவதுமாக இசையின் பக்கமே திரும்பவில்லை. நான் விருப்ப ஓய்வு பெற்றதும் திடீர் ஞானோதயம் ஏற்பட்டது. அதுகாலம் வரை வீட்டில் வீணை இல்லை. எனவே அம்மாவுக்கு ஒரு வீணை வாங்க நினைத்தேன். தஞ்சாவூர் ஏகாண்ட வீணை மிகவும் புகழ் பெற்றது. அதையே அம்மாவுக்கு வாங்க விரும்பினேன். தம்பி Venkatraman Ranganathan மற்றும் Sathya Venkatesan ஆகியோரிடம் ஆலோசனை கேட்டேன். கூகுள் தேடலில் தஞ்சாவூர் வீணை வெங்கடேசன் என்பவர் பரம்பரையாக வீணை செய்பவர் என்று அறிந்து அவரைத் தொடர்பு கொண்டு வீணை வாங்கியாயிற்று.
இந்த வீணையை கனடா கொண்டு செல்வது கடினம் என்று தெரிந்தது. Air Cargoவிலோ, extra baggage ஆகவோ கொண்டு சென்றால் வீணை பத்திரமாக வந்து சேர்வது நிச்சயம் இல்லை. ஒருமணி நேரம் வெயிலில் இருந்தால்கூட வீணையின் மெழுகு உருகிவிடும். வீணையை பாக்கிங் செய்ய ஆகும் கட்டணம் வீணையின் விலைக்கும் அதிகம். விமானத்தில் எக்ஸ்ட்ரா சார்ஜ் வேறு. இந்த நிலையில் கூகுள் செய்தியில் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வசதியாக பாகங்களைத் தனியாகக் கழற்றக்கூடிய சுலபமாக இணைக்க முடிகிற வீணை பற்றி படித்தேன். பெங்களூரில் பசவன்குடியில் Veena works என்ற கடையில் உரிமையாளர் ராஜூ என்பவர் செய்கிறார். அவரைத் தொடர்பு கொண்டு Portable Veena பற்றி விசாரித்து photos அனுப்புமாறு கேட்டேன். ஆனால் ஒரு மாதத்திற்குப் பின்னர் தான் என்னுடைய ஆடர் எடுக்க இயலும் மிகவும் பிஸியாக இருப்பதாகச் சொன்னார். வீணை செய்ய ஆடர் கொடுப்பதற்கு முன், முதலில் அந்த வீணையை வீடியோ கால் மூலமாகப் பார்க்க விரும்பினேன். என் பெங்களூர் நட்புக்களை பசவன்குடி சென்று உதவமுடியுமா என்று கேட்டேன். என் மகளிடம் இது குறித்து பேசியபோது அவளது தோழி Rohini Rajasekaran ஐக் கேட்கலாம் என்றாள். ரோஹிணி என் மகள் டெலிவரியின் போது ஒரு வாரம் எங்கள் வீட்டுக்கு வந்து மிகவும் உதவியாக இருந்தாள். எனக்கு நல்ல பழக்கமான பெண். அவளிடம் கேட்டபோது வீக் எண்டில் பசவன்குடி போகிறேன் எனவும் அவளது house owner ஒரு இசைக் கருவிகள் கடை வைத்துள்ளார் எனவும் Portable Veena அவரிடம் கிடைக்கும் என்றும் தெரிவித்தாள். பருத்தி புடவையாய் காய்த்தது போல எனக்கு ரொம்ப சந்தோஷம். அன்று மாலை வீடியோ காலில் ரோஹிணி குறிப்பிட்ட வீணையைப் பார்த்தேன். வீணை அழகாக இருந்தது. நாதம் கேட்க நன்றாக இருந்தது. கடைக்காரர் நேரில் வந்து வீணை வாசித்து திருப்தி அளித்தால் வாங்குங்கள் என்றார். நேரில் வரவேண்டியது மிகவும் அவசியம் என்றார். ஏப்ரல் 1ந்தேதி முதல் பெங்களூர் வருபவர்கள் கோவிட் நெகடிவ் ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி என்றறிந்து உடனடியாக பெங்களூர் சென்றேன். வீணை வாசித்ததில் மிகவும் பிடித்தது. வீணையின் இரு குடங்கள், யாளி அனைத்தும் கழற்றி தனியாக பேக் செய்து வீணை மெட்டுக்கள் முதல் மீட்டும் பகுதிவரை தனியாக கிடார் போல இருந்ததை கிடார் பேகில் பேக் செய்து கொடுத்தார். கிடார் பேக் தோளில் மாட்டிக் கொண்டு குடங்களை backpack ல் வைத்து கொண்டு வந்தேன். பெங்களூர் சென்ற போது என்னை கடைக்கு அழைத்துச் சென்று, வீணை செலக்ஷனில் உடனிருந்து, எனக்கு மிகுந்த அன்புடன் லஞ்ச் செய்து, கன்டோன்மெண்ட் ஸ்டேஷனில் டபிள் டெக்கர் ரயில் ஏறும் வரை ரோஹிணி என்கூடவே இருந்தாள்.
கிடார் பேக் வழக்கமான சூட்கேஸைவிட அதிக நீளம் uneven ஆக இருப்பதால் check in baggage or hand baggage இரண்டிலும் அனுமதிக்கப்பட்டார்கள். தனியாக கார்கோவில் அனுப்புங்கள் என்று தம்பி சொன்னான். ஆசையாய் வாங்கிவந்த வீணையைக் கொண்டு செல்லமுடியாதோ என்று மிகவும் வருத்தமாக இருந்தது. ஏர்லைன்ஸை தொடர்புகொள்வது, அபுதாபியில் இருக்கும் தம்பி Jeyakumar Srinivasan இடம் கேட்பது, லக்ஷ்மண் ஸ்ருதி கடையில் பக்கத்து வீட்டு நரஸிம்மன் மாமா அவர்கள் விசாரித்தது, இதுபோக மகளிடம் ஆலோசனை கேட்பது என ஒரு brain storming sessionஏ நடந்தது. இறுதியாக வீணையை ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் நேரே கொண்டு சென்று அனுமதி உண்டா என்று கேட்டோம். செக்கின் பாகேஜில் அனுமதி உண்டு. மிக நன்றாக பாக் செய்து வரவும் என்று சொன்னதைக்கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டருகே இருக்கும் பாக்கர்ஸில் விசாரித்ததில் பாக் செய்து தருவதாகச் சொன்னார். மருமகன் Kishor Selvaraj அருகில் இருந்து மிக அருமையாக பத்திரமாக பாக் செய்து வாங்கி வந்தார். விமானப்பயணத்திற்குத் தயாராக இருந்த வீணையைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஏர்லைன்ஸில் Fragile sticker ஒட்டி ஸ்கேன் செய்து மிக பத்திரமாக கனடா வரை கொண்டு வந்து சேர்த்தார்கள். நாங்கள் சந்தோஷமாய் வீணை வாசிக்கிறோம். ஆன்லைன் க்ளாஸ் ஆரம்பித்தாயிற்று. பேத்தி ஹாசினி தற்போது கொள்ளுப் பாட்டியிடம் வீணை கற்றுக் கொள்கிறாள்.
தலைப்பில் இடம் பெற்றுள்ள பாடல் எனது பேரன்புக்குரிய மாமன்மகள் லக்ஷ்மிப்ரபா சேகர் அவர்கள் குறிப்பிட்டது. எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த பாடல். கனடாயணம் தொடரும்….
No comments:
Post a Comment